ஆனந்தமே பரமானந்தமே

பல்லவி

ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

சரணங்கள்

1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய் கிடைத்திடினும் --- ஆனந்தமே

2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
காரணமின்றி கலங்கேனே நான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே --- ஆனந்தமே

3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் --- ஆனந்தமே

4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ --- ஆனந்தமே

5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார் --- ஆனந்தமே

6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை --- ஆனந்தமே