என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்

பல்லவி

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ,
ஏற்றுக் கொள்ளும் , யேசுவே

அனுபல்லவி

அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது , இப்போது --- என்னை

சரணங்கள்

1. அந்தகாரத்தி னின்றும் , பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும் ,
சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
எந்தையே , உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் --- என்னை

2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன் ;
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணைசெய் , தேவா --- என்னை

3. நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு ;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை --- என்னை