கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே

பல்லவி

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ

அனுபல்லவி

வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும்

சரணங்கள்

1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
பத்தியில் தெளிக்கவும், - நித்ய
ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்,
சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் --- கிஞ்சிதமும்

2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
கண்டடைந்தார் பேறு? - நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும் பார் இது மா ஜெயம் --– கிஞ்சிதமும்

3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் - அதின்
தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
துணை அவர் பாதம்
ஏற்றர வணைக்கவே பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து நீ --– கிஞ்சிதமும்