ஆவியை மழைபோலே யூற்றும்

பல்லவி

ஆவியை மழைபோலே யூற்றும், - பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.

அனுபல்லவி

பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், --- ஆவியை

சரணங்கள்

1. அன்பினால் ஜீவனை விட்டீர்; - ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். --- ஆவியை

2. சிதறுண்டலைகிற ஆட்டைப் - பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு;
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். --- ஆவியை

3. காத்திருந்த பல பேரும் - மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். --- ஆவியை

4. தோத்திரக் கீதங்கள் பாடி - எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். --- ஆவியை